Monday, 21 March 2016

வள்ளுவத்தில் மலர்கள்



இயற்கையினைக் கூறாத கவிஞர்கள் படைப்பாளர்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை எனலாம். இலக்கியங்கள் இயற்கை மணம் வீசக் காரணம் அவர்களே. மனிதனின் வாழ்க்கை இயற்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது. அதனால் இலக்கியங்கள் இயற்கையோடு ஒன்றிய நிலையில் மனித வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதன்வழி திருவள்ளுவரும் இயற்கையை மறந்தாரில்லை. இதனை,
“செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்”  -குறள் -637

எனும் குறளில் ஒரு நூல் படைப்பதாயினும் இயற்கையை அறிந்து அதனோடு இணைந்து படைக்கப் பெற வேண்டும் என்று கூறுகிறார். அவ்வகையில் இயற்கையில் ஒன்றான மலரினை வைத்து வள்ளுவர் சில கருத்துக்களைப் புலப்படுத்துகிறார்.
      தமிழ் மொழியின் வளத்தினை உலகறியச் செய்த திருக்குறள் மலர் என்பது மனித வாழ்வில் சிறப்பான பங்கு வகித்தமையை சிலவிடங்களில் தெளிவுப்படுத்துகிறது.

அறத்துப்பாலில்  -  கடவுள் வாழ்த்து, விருந்தோம்பல்

பொருட்பாலில்   –  அறிவுடைமை, ஆள்வினையுடைமை, சொல்வன்மை,   
                  ஊக்கமுடைமை

இன்பத்துப்பாலில் – புணர்ச்சி மகிழ்தல், நலம் புனைந்துரைத்தல், அலர்  
                    அறிவுறுத்தல், பொழுது கண்டு இரங்கல், உறுப்பு
நலனழிதல், குறிப்பு அறிவுறுத்தல், புணர்ச்சி விதும்பல்,     புலவி நுணுக்கம்

அறத்துப்பால்:
அறன்வழிச் செல்லலே சீரிய வாழ்வைப் பெற்றுத்தரும். அறவாழ்க்கை நடத்த இயற்கையைத் தெய்வங்களாக மனிதன் வழிபடலாயினான். மலரின் கண் சென்றவனது திருவடிகளைச் சேர்ந்தவர்கள் நீண்ட நாள் வாழ்வார்கள் என்பதனை,

      “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
       நிலமிசை நீடு வாழ்வார்”  - குறள் -3

இங்கு மலர் என்பது தெய்வத்திற்குரிய பொருளாக வள்ளுவர் கூறுவதைக் காணலாம்.
      தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளில் விருந்தோம்பும் பண்பும் ஒன்று.

      “மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
      நோக்க்க் குழையும் விருந்து – குறள் – 90

இக்குறளில் அனிச்ச மலரை விருந்தோம்பல் பண்பிற்கு ஒப்பிடும் வள்ளுவர் விருந்தினரின் மனம் வாடாத அனிச்ச மலரினை விட மெல்லியது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.

பொருட்பால் :
      அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை ; பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை  என்ற கருத்திற்கு இணங்க, பொருட்செல்வத்தின் இன்றியமையாமையை பொருட்பாலில் தெள்ளிதின் உணர்த்துகிறார். செல்வம் என்பது சேர்த்து வைக்கும் பொருள் மட்டுமல்ல. அறிவும் அதனைச் சார்ந்த பிறவுமாம்.
      உலகில் உள்ள உயர்ந்தவர்களை எல்லாம் நண்பர்களாக்கிக் கொள்ளும் திறமையுடையது அறிவு. அந்த அறிவு விரிவதும்  சுருங்குவதும் இல்லாது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை,

            “உலகம் தழீஇயது ஒல்பம் மலர்தலும்
            கூம்பலும் இல்லது அறிவுகுறள் – 425

என்ற குறள்வழி உணர்த்துகிறார்.
      ஆள்வினைப் பண்பைக் குறிப்பிடும் தெய்வப்புலவர்,

      “மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்
       தாளுளாள் தாமரையி னாள் குறள் – 617

என்ற குறளில் “தாமரையினாள்  என்பது செல்வத்திற்கு இறைவியான திருமகளைக் குறிப்பிட்டு, சோம்பல் இல்லாதவனிடம் ஆள்வினையுடைமைத் தன்மை காணப்படும் என்றும் அவர்களிடம் மட்டுமே திருமகள் குடிகொள்வாள் என்றும் வலியுறுத்துகிறார்.
      சொல்வன்மையின் சிறப்பினை எடுத்து இயம்பும் வள்ளுவப் பெருந்தொகை நல்ல நூல்களைக் கற்று அதன் சிறப்பினைப் பிறர் அறிய எடுத்துரைக்கும் சொல்வன்மை பெற வேண்டும் எங்கிறார். இல்லையெனில் அது மணம் வீசா மலரினைப் போன்று பயனற்றுப் போகும் என்பதை,
     
      “இணர்ஊழ்த்தும் நூறாமலர் அனையர் கற்றது
      உணர விரித்துரையா தார் - குறள் -650

என்று மலரின் நாறாத்தன்மைக்கு ஒப்புமைப்டுத்துகிறார்.
      மேலும், அறவழியில் நின்று பொருட்செல்வத்தை அடைய வேண்டுமெனில் உள்ளத்தில் ஊக்கமுடைமை வேண்டும் என்பதை நீரில் இருக்கும் பூக்களின் தாளினது நீளங்களைச் சான்று காட்டிக் குறிப்பிடுகிறார். இதனை,

      “வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் – 595

என்பதன் மூலம் தெரிவிக்கிறார்.

இன்பத்துப்பால் :
      இன்சுவை நிரம்பிய இன்பத்துப்பாலில் மலரினை மாதரின் கூந்தலில் சூடும் பொருளாகவும், கண்களுக்கும் நாணத்திற்கும், இடைமென்மைக்கும், பாத்தின் மென்மைக்கும், காமத்திற்கும், புன்முறுவலின் தன்மைக்கும் என்று பெண் தன்மைக்கு இணையாகப் புலப்படுத்துகிறார்.
      அனிச்ச மலர் மற்ற மலர்களைக் காட்டிலும் மென்மையாகவும், அழகானதாகவும் காணப்படுகிறது. எனினும் தலைவனால் விரும்பப்பட்ட தலைவியோ அனிச்ச மலரை விட மென்தன்மை வாய்ந்தவளாகவும், அழகு படைத்தவளாகவும் காணப்படுவதை,
     
      “நன்னீரை வாழி அனிச்சமே! நின்னுனும்
      மென்னீராள் யாம் வீழ்பவள் குறள் – 1111

என்ற குறளில் உணர்த்துகிறார். தலைவியானவள் அனிச்ச மலரினைக் காம்பு களையாமல் சூடியிருப்பதால் அவளுடைய இடை பாரம் தாங்காமல் முறிந்து விடும். அதனால் நல்ல படாஅ பறை ஒலியா (குறள் -1115) நெய்தற் பறையே ஒலிக்கும் என்கிறார். தலைவியின் பாதத்தினைச் சுட்டும் போது,

      “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
      அடிக்கு நெருஞ்சிப் பழம் குறள்-1120
என்று அனிச்ச மலரின் இதழானது தலைவியின் பாதத்திற்கு நெருஞ்சிப்பழம் போன்று துன்பம் விளைவிக்கும் என்பதை அறிவிக்கிறார்.
      மலர்கள் பெண்களின் கண்களுக்கு ஒப்பாகச் சுட்டுவதை சங்க இலக்கியங்களிலிருந்து நாம் அறிகிறோம். அவ்வகையில் வள்ளுவர்,
     
      “மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண்
      பலர்காணும் பூவொக்கும் என்று குறள் – 1112

என்ற குறளில் தலைவன், தாமரை, குவளை, நீலம் போன்ற மலர்களைக் காணும் போது, தன் தலைவியின் கண்கள் நினைவுக்கு வருவதாக தம் நெஞ்சுக்குக் கூறுவதாகச் சுட்டுகிறார்.
                முன்பு தலைவியின் கண்களின் அழகினைப் பார்த்து வெட்கி தலை குனிந்த மலர்கள் தற்போது நாணத்தை ஒழித்த விதத்தினை,
      “சிறுமை நமக்கொழியர் சேண்சென்றார் உள்ளி
      ந்றுமலர் நாணின் கண் குறள் – 1231
என்ற குறள் வழி விளக்குகிறார்.
      சொல்வன்மைக்கு நாறா மலையினை ஒப்புமைக் கூறிய வள்ளுவர் இங்கு அரும்பினுள்ளே இருப்பதாகிய புறத்தே புலனாக நறுமணம் போன்று தலைவியின் முறுவலின் புறத்தே புலனாகா ஒரு குறிப்பு உள்ளதாகத் தெரிவிக்கிறார். இக்கருத்தினை,

      “முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
      கைமொக்குள் உள்ளதுஒன் றுண்டு குறள் – 1274

என்னும் குறள் வழிப் புலப்படுத்துகிறார்.
      தலைவன் கோட்டுப்பூச் சூடியதைத் தலைவி கண்டால், முன்பு தலைவனால் காதலிக்கப்பட்ட ஒருத்திக்குக் காட்டுவதற்காக சூடீனீர் என்று கோபம் கொள்வாள். இக்கருத்தைக் கீழ்வரும் குறட்பாவில் தெள்ளிதின் உணர்த்திச் செல்கிறார்.

      “கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
      காட்டிய சூடினீர் என்று  குறள் – 1313

      மேலும் “தாமரைக் கண்ணான் (குறள்-1103), “தோட்டார் கதுப்பினாள் (குறள்-1105) என மலரின் தன்மையினை உணர்த்துவதனை அறியலாம்.
      மென்மையான பொருட்கள் பல இருப்பினும் மக்களுக்கு மகிழ்வளிக்கின்ற மலர்களையே எடுதுக்காட்டாக உரைக்கும் பாங்கு நாட்டுப்புறப் பாடல்களிலும் இலக்கியங்களிலும் காணப்படுகிறது. வள்ளுவரும்,

      “மலரினும் மெல்லிது காமஞ்ச் சிலரதன்
      செவ்வி தலைப்படு வார் குறள் – 1289

என மென்மைக்குக் காட்டாக மலரைக் குறிப்பிடுகிறார்.
இவ்வாறு திருவள்ளுவர் மலரின் வழி வாழ்வின் இன்ப துன்ப உணர்வுகளை மனம் கொள்ளும் வகையில் பயன்படுத்தியமையை இக்கட்டுரைத் தெளிவுறுத்துகிறது எனலாம்.







No comments:

Post a Comment