உணவின் மகத்துவமும்
மருத்துவமும்
முனைவர் இரா.பொன்னி
உதவிப் பேராசிரியர்
பாத்திமாக் கல்லூரி
மதுரை
சங்க
இலக்கியத்தில் ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற வரிகள் உணவின்
இன்றியமையாமையை எடுத்தோதுகின்றன. உடல்
ஆரோக்கியத்திலும் உணவின் பங்கு மகத்தானது.
“உண்டி முதற்றே உணவின் பிண்டம்”, உணவெனப்டுப்பது நிலத்தொடு நீரே” என்ற புறநானூற்று
வரிகள் இக்கருத்தினை எடுத்துரைக்கும். மணிமேகலை காப்பியம் உணவை ‘உயிர் மருந்து’
எனவும், இல்லாதவர்களுக்கு உணவு வழங்கி அறம் செய்த மணிமேகலையை ‘உயிர் முதல்வி’
எனவும் வழங்குகிறது. இவ்வாறு உணவின் முதன்மையைப் பல இலக்கியங்களும் உறுதி
செய்கின்றன. அவை உணவுப் பற்றியக் கருத்துக்களை மக்கள் வாழ்வியலோடு
எடுத்துக்காட்டியும், உணவு தானத்தை வற்புறுத்தியும் வருகின்றன. உடலுக்கு நலன்
பயக்கும் அறுசுவை அமிழ்தத்தைத் தமிழர்கள் பயன்படுத்தியமையும், ஊட்டந்தரும் உய்வுறை
நலன்கள் பற்றியமையும் பண்டைக்கால நூல்கள்
வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் .
சங்க இலக்கியத்தில் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத
உண்வு வகைகளை தமிழர் பல பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.
”உணாவே
வல்சி யுண்டி யோதன
முசமை
பதமே யிரையா கார
முறையே
யூட்ட முணவென லாகும்”
உணா,
வல்சி, உண்டி, ஓதனம், அசனம், சதம், இரை, ஆகாரம், உறை, ஊட்டம் என உண்வின்
பெயர்களாகப் பிங்கல நிகண்டு குறிப்பிடுகிறது. தொல்காப்பியம் கருப்பொருட்கள்
பற்றிக் கூறும்போது,
”தெய்வம்
உணாவே மாமரம் புட்பறை”
என்பதில் ‘உணா’ என்னும் வழக்காற்றைப்
பயன்படுத்துகிறது. இவ்வாறு தமிழிலக்கிய இலக்கணங்கள் உணவின் மகத்துவத்தை
விளக்குகின்றன.
தமிழ் அகராதி ஒன்று சோற்றினை அடிசில், அயினி, அவிழ்,
கூழ், சொன்றி, நிமிரல், புழுக்கல், புன்கம் (பாற்சோறு), மூரல் (பருப்புச் சோறு),
பொம்மல், மிதவை (பாற்சோறு), வத்தம் ( நெற்சோறு) என்று பகுக்கிறது. மேலும் கூலம் எனப்படும் தானிய வகைகளைப்
பதினெட்டு வகை என்கிறது. அவை நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்,
கோதுமை, துவரை, ராகி, எள்ளு, கொள்ளு, பயறு, உளுந்து, அவரை, கடலை, மொச்சை, காராமணி
என்பன. இத்தகு தானிய வகைகளை தமிழர்கள்
உணவாகப் பயன்படுத்திய செய்தி தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளது. எண்வகை உணவாகக்
கூறும் அவை நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை ஆகியன.
”மெய்திரி
வகையின் எண்வகை உணவின்
செய்தியும்
வரையார்” (தொல்.பொருள்)
உணா வகைகளில் உப்புணா, முதலுணா, கொழுப்புணா,
இனிப்புணா, நீருணா என்பர். இவை குருதி, எலும்பு, நரம்பு, தசை, கொழுப்பு, உமிழ்நீர்
ஆகியவற்றைப் பெருக்க உறுதுணையாக்கிறது. இந்த
உணவு வகைகளை பழந்தமிழரும் பயன்படுத்தியுள்ளனர்.
நாம் உண்ணும் உணவு ஒவ்வொன்றிலும் ஒரு சுவை
அடங்கியுள்ளது. அச்சுவை உடலுக்கு ஊட்டந்தரும் உய்வுறைகள் (vitamins)
ஆகும். யாக்கை என்பது குருதி, தசை, எலும்பு, நரம்பு, கொழுப்பு, உமிழ் நீர் ஆகிய
தாதுக்களைக் கொண்டுள்ளது. இவை முறையே துவர்ப்பு, இனிப்பு, கார்பு, கசப்பு,
புளிப்பு, உவர்ப்பு ஆகிய அறுசுவைகளௌடன் சேர்ந்து அவற்றைப் பெருக்கவும்,
வளர்க்கவும் செய்கின்றது. இவை மூளை சரிவர இயங்க உதவுகிறது. சங்க காலத் தகிழர்களும்
இதனைப் பின்பற்றியே வாழ்ந்து வந்துள்ளனர். ஊட்டந்தரும் உய்வுறைகள் ஐந்து
பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை ஆற்றல், வீறு, வளம், தெளிவு, இனிமை (வைட்டமின்
ஏ,பி,சி,டி) முதலியனவாம்.
துவர்ப்பு
ஆற்றலும், கார்ப்பு வீரும், இனிப்பு வளமும், உவர்ப்பு தெளிவும், கைப்பு
மென்மையும், புளிப்பு இனிமையும் தந்து உடலுக்கு நன்மை பயக்கின்றம. பாகற்காய்,
இஞ்சி, தேன், களாம்பழம், நெல்லிக்காய்,
நாவற்கனி போன்ற அறுசுவையையும் உணவில் சேர்த்துள்ளனர் என்பதை தமிழ் நூல்கள்
எடுத்தோதுகின்றன. அன்றைய கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாக்
கொண்டே இருந்துள்ளன. பச்சைக் காய்கறிகள், தானியம், பழம், பால் போன்றவற்றில்
அறுசுவை மண்டிக் கிடக்கிறது. பண்டைக்கால மக்கள் அறுசுவை நலனை அறிந்தே அவற்றை
விருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர்.
நாலடியாரும் இதனை வலியுறுத்தி,
”அறுசுவை
யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை
நீக்கியுண் டாரும்”
என்று கூற்கிறது. மணிமேகலையின்,
”அறுசுவை
நால்வகை அமிழ்தம் பாத்திரத்தளித்து”
என்னும் வரியும் இக்கூற்றினை ஒத்துள்ளது. ஆக, அறுசுவை
உணவு ஊட்டந்தருவது என்பது புலனாகிறது.
பொதுவாக
உணவு என்பது சோறும் நீருமாகும். இதனை,
”உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி
னோரே”
என்ற புறநானூற்றூ வரிகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும்
உணவும் நீரும் மனிதனுக்கு ‘இருமருந்து’ என்றும் விளக்கம் தருகிறது. சாதல் நீங்க
ஒளவையார் நெல்லிக்கனி அளித்த செய்தியும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. திருவள்ளுவரும் ‘மருந்து’ எனும் ஓர் அதிகாரத்தையே தனித்துக்
கூறி உணவாகிய அமிழ்தத்தினை அளவறிந்து
உண்டால் மருந்து தேவையில்லை என்று தெளிவுப்படுத்துகிறார். இதன்கண் இடையிடையே பட்டினிக் கிடந்து உண்பதால்
உடல் நோய் தாக்காதும் இருக்கும்; பட்டினியே சிறந்த மருந்தாகவும் அமையும் என்பதும்
புலனாகிறது.
ஆக,
நம் அடிப்படை வசதிகளில் முதன்மையாக வைத்துக் கூறப்படும் உணவினை சுவையோடும்,
ஆரோக்கியத்தோடும் சங்க கால மக்கள் உண்டு வந்துள்ளனர். அவர்கள் வழிபாட்டிற்கும்,
விருந்திற்கும் சிறந்த அறுசுவை உண்வு வகைகளையே பயன்படுத்தியுள்ளனர். உணவையே
மருந்தாகவும் உட்கொண்டுள்ளனர். இதனைத் தெளிவுபட
தமிழ் நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இதன்மூலம் உணவின் மகத்துவத்தையும் , மருத்துவ நலனையும் அறிந்து நம்முன்னோர்
வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
No comments:
Post a Comment