பாரதியார்
புதிய ஆத்திசூடியில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள்
தமிழ்
இலக்கிய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் ஒரு திருப்புமுனையாக
அமைவதற்குக் காரணமானவர் மகாகவி பாரதியாவார். தன் இனம், தன் மொழி,
தன் நாடு என்று மட்டும் சிந்திக்காமல் மற்ற இனங்கள், மொழிகள், நாடுகள் என்று சிந்தித்துக் கவலைப்பட்டு
அச் சிந்தனைகளையும் தன் படைப்புகளில் வெளிப்படுத்தியவர் பாரதி. ஆதலால் உலக மகாகவி
என்றும் அழைக்கப்படுகிறார். 'இந்திய தேசியக் கவிஞர்களுக்கு
இடையில் திலகம் போன்றவர் பாரதியார்' என்றும் வினோபா பாவேவால்
போற்றப் பெற்றவர். அவர்தம் படைப்புகளில் தன்னம்பிக்கையூட்டும் சிந்தனை விழுமியங்கள்
பெருக்கெடுத்து உள்ளன. ’ஊருக்கு நல்லது சொல்வேன்; உண்மை தெரிந்து சொல்வேன்’ என்ற மன உறுதி கொண்ட பாரதி தன் உள்ளத்து உணர்வுகளை கவிதைகளில்
வெளிப்படுத்துகிறார்.
அற இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்கினை
ஆற்றி வருகிறது ஆத்திசூடி.
நீதிக்கருத்துக்களை மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு எழுதப்பட்டதே இந்நூல்.
இந்நூலுக்கு வித்திட்டவர் ஒளவையார். ஒளவையார் நூலிலும் தன்னம்பிக்கை உணர்வு
சிந்தனைகள் வெளிப்படுவதை நிரம்பக் காணலாம். பாரதியின் விடுதலை உணர்வு, தேசிய உணர்வு, பக்தி உணர்வு, பெண்விடுதலை,
சீர்திருத்த உணர்வு, ஆளுமைத்திறம் போன்றன ’பாரதியார் புதிய ஆத்திசூடி’ யிலும் தன்னம்பிக்கை
நோக்கோடு மிளிர்கிறது. தையலை உயர்வு சொல், எண்ணுவது உயர்வு,
குன்றென நிமிர்ந்து நில், கைத்தொழில் போற்று,
சரித்திரத் தேர்ச்சி கொள் என்ற ஐந்து தன்னம்பிக்கை வரிகளும்
பாரதியார் கவிதைகளில் இழையோடி இருப்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம். இவை
போன்று புதிய ஆத்திச்சூடியின் 110 வரிகள் கருத்துக்களையும்
அவர்தம் கவிதைகளில் ஒப்பிட்டு நோக்கலாம்.
தையலை உயர்வு செய்
’பெண் இயற்கையிலேயே அறிவு படைத்தவள்; பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் இறைவன்’ என்றான்
மகாகவி. இங்கு பெண் அறிவும், ஞானமும் பெற்றவளாகிறாள் என்ற கவியின் கருத்து முன்வைக்கப்படுகிறது. மேலும்,
குடும்பத்திலுள்ள அனைத்து வேலைகளையும் செய்து குடும்பத்தைக் கட்டிக்
காப்பவளாக பெண் திகழ்கிறாள். துன்பம் தீர்வதும் பெண்மையினால்தான். நல்லொழுக்கமும்,
தீமைகளின் அழிவும் பெண்ணினாலே ஏற்படும். பெண்களின் கடைக்கண்
பார்வைப்பட்டால் காற்றிலேறி விண்ணையும் சாட முடியும். இதனை,
”துன்பம் தீர்வது பெண்மையி
னாலடா!
. . . .
. . .
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
. . .
. . .
காற்றி லேறியவ் விண்ணையுஞ்
சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே”
என்கிற வரிகள்
தெளிவுப்படுத்துகின்றன. ஆக,
பெண்ணின் துணையிருந்தால் துன்பத்திலிருந்து விடுபட்டு அனைத்தையும்
சாதிக்க முடியும். இத்தகு பெண்ணை உயர்வு
செய் என்கிறார் பாரதி. இவ்வரி பெண்ணின் உயர்வை மட்டும் வெளிப்படுத்தாது
அப்பெண்களுக்குத் தன்னம்பிக்கைதனையும் ஊட்டுவதாய் அமைந்துள்ளது.
எண்ணுவது உயர்வு:
எண்ணங்கள் தான் நம்மை வாழவைக்கும்.
எண்ணங்களில் உயர்வு இருந்தால் வாழ்வு சிறக்கும். இதைத்தான் வள்ளுவரும் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார்.
உயர்வானவற்றை நினைப்பது மட்டும் போதாது கிடைத்ததை விட்டுவிடக்கூடாது என்பதை 'கல்வியதை விடேல்' என்கிறார். எந்த சூழ்நிலையிலும் மனம் நொந்துபோக கூடாது என்றும் நம்பிக்கை
தருகிறார். 'சிதையா நெஞ்சுகொள்' , 'தோல்வியில்
கலங்கேல்' என்ற வரிகளில் எப்பொழுதினும் கலங்கா உள்ளமும்,
சிதைந்துவிடா மன உறுதியும் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
பொதுவாக பாரதியார்
தமது படைப்புகளில் ஆளுமைப் பண்பை எடுத்துக் காட்டியுள்ளார். அது போலவே புதிய
ஆத்திச்சூடியில் வளரும் தலைமுறைக்கான தன்னம்பிக்கைச் சிந்தனையாக மிளிர்கிறது. அவர்
பாரத தேசம் என்ற பாடலில் அக்கத்தினை முன் வைக்கிறார்.
சிங்களத்
தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும்
நீரின் மிகையால்
மையத்து நாடுகளில்
பயிர் செய்குவோம்
உலகத்
தொழில் அனைத்தும் உவந்து செய்வோம் என்று தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அடுக்கிக்
கொண்டே செல்கின்றார். தகவல் தொழில் நுட்பத்த்துறை வளர்ச்சியே உலக மானுடத்தை
இணைக்கும் பெருஞ்சக்தி என்பதை உணர்ந்திருந்த பாரதி, விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையிலான அனைத்து அறிவுச் செல்வத்தையும் இந்திய மக்கள் பெற்றாக வேண்டும் என்பதையே
இப்பாடல் வழி உணர்த்துகிறார்.
குன்றென நிமிர்ந்து
நில்
வறுமை விடாது துரத்திய போதும் சிதையா நெஞ்சு
கொண்டு வாழ்ந்தவர் பாரதி. தனிமனித ஆளுமையில் தான் இந்த்த் தேசம் பெருமை பெற
முடியும், வெற்றியை நாட முடியும் என்பதில் அசைக்க முடியாத
நம்பிக்கை கொண்டிருந்ததை,
மனதில்
உறுதி வேண்டும்
வாக்கினிலே
இனிமை வேண்டும்
கனவு
மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது
விரைவில் வேண்டும்
என்று
பராசக்தியிடம் வேண்டுவதைக் காண்முடிகிறது.
தேடிச்
சோறுநிதந் தின்று
பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம்
வாடித் துன்பமிக உழன்று
பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை
கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல
வேடிக்கை மனிதரைப் போலே
நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்றார் முண்டாசு
கவிஞர். துன்பத்தில் மனதைத் தொலைத்து கூற்றுக்கு இரையாகும் சாதாரண வேடிக்கை
மனிதரைப் போல் வீழாது தன் எழுத்துத் திறத்தால் இவ்வையத்தைப் பாலித்திடச் செய்தவர்.
கைத்தொழில் போற்று
கல்வி கற்ற வழியைப்
பின்பற்றி நடக்க வேண்டும். அப்போது தான் நல்ல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக
பொருள் தரும். வாழ்க்கையில் பிறரைச் சார்ந்து வாழக் கூடாது என்பதைத்
தெளிவுறுத்துவதாய் ‘
கைத்தொழில் போற்று’ என்கிறார். அதுவே சில
நேரங்களில் ஒற்றுமையாகப் பலர் சேர்ந்து தொழில் செய்தால் பெரும் பொருள் ஈட்டுவதற்கு
ஏதுவாக இருக்கும் பணத்தைச் சேர்க்க வேண்டும்.
நாளெல்லாம் வினை செய்
பணத்தினைப் பெருக்கு
என்று
தன்னம்பிக்கைச் சிந்தனைகளை முன்வைக்கிறார். ஆக, கூடித் தொழில் செய்தால்
பணத்தைப் பெருக்கலாம் என்கிற தன்னம்பிக்கை விதையை மனதில் விதைக்கிறார் பாரதியார்.
சரித்திரத் தேர்ச்சி
கொள்
எப்படியும் வாழலாம்
என்பது வாழ்க்கை அல்ல முறையான வாழ்க்கையை வாழ வேண்டும். கோழைத்தனமாக தன் மரியாதையை
இழந்து வாழ்வதை விரும்பாத பாரதியார் ஆத்திச்சூடியில் தன்னம்பிக்கைக் கருத்துக்களை
எடுத்துக் கூறியுள்ளார்.
பாரதியார் கீழோர்
என்று குறிப்பிடுவது அறிவாலும் வீரத்தாலும் செயலாலும் கீழ்மைத்தனமாக உள்ளவர்களைக்
குறிப்பிடுகிறார். அவர்களிடம் இருக்கும் செல்வாக்கைக் கண்டு அஞ்சக்கூடாது. அதேபோல
எப்போது தலைநிமிர்ந்து இருக்கவேண்டும் எதற்காகவும் நாய் போல் வாழக்கூடாது தாழ்ந்து
போகக் கூடாது கெட்டவர்களுக்குப் பயப்படக் கூடாது மானத்தோடு வாழ வேண்டும். மனிதன்
இந்தக் கருத்துக்களைப் பின்பற்றினால் எப்போதும் சுய மரியாதையை இழக்கமாட்டான்
இவையெல்லாம் நாட்டு மக்களுக்காக மட்டும் கூறியது அல்ல அது போலவே பாரதியாரும்
வாழ்ந்து காட்டியவர்.
அச்சமில்லைஅச்சமில்லைஅச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெலாம்எதிர்த்துநின்றபோதினும்,
இச்சைகொண்டேபொருளெலாம்இழந்துவிட்டபோதிலும்,
அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
என்ற வரிகளை வாசிப்பவர்களின் மனதில் ஒரு
துணிச்சலும் தன்னம்பிக்கையிம் பிறப்பது உறுதி. விரும்பிய பொருளெல்லாம் இல்லாது
வெறுமையாய் நின்றாலும் அச்சமில்லாது துணிவோடு இருக்க வேண்டும் என்னும் நம்பிக்கையை
இப்பாடல் வரிகள் விதைக்கின்றன.
பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் வாழ்க்கைப்
பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் எதிர்கொள்ள உதவுகின்றன. விழிப்புணர்வு
கொடுக்கின்றன. நேர்வழியில் செல்வதற்கு வேண்டிய உத்வேகத்தையும்
தன்னம்பிக்கையும் அளிக்கின்றன. துன்பமும் தடுமாற்றமும் நிறைந்த இந்த மனித
வாழ்க்கையில் நம் மைந்தர்களை சரியாக திசையிலும் முறையான பாதையிலும் வழி நடத்திச்
செல்கின்றன.
No comments:
Post a Comment